கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!
வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தை இரக்கத்துடன் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் வயநாடு எம்பி பிரியங்கா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியதாவது: வயநாடு மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. எனவே, அவர்களை மீட்டெடுக்க அனைத்து சாத்தியமான உதவிகளையும் ஆதரவையும் வழங்க வேண்டும். வயநாடு மக்களவை எம்பியாக, அந்த பகுதி மக்களின் அவல நிலையை உங்களுக்கு தெரிவிப்பது எனது கடமையாகும்.
நிலச்சரிவு ஏற்பட்டு ஆறு மாதங்கள் ஆன பின்னும், தங்கள் வாழ்வை மீட்டெடுக்க முடியாத நிலையில் உள்ள அந்த மக்களின் நிலை எனக்கு மனவேதனை அளிக்கிறது. இதனை அடுத்து, சூழ்நிலையை கருத்தில் கொண்டு வயநாடு மாவட்டத்திற்கு தேவையான நலத்திட்டங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்.
வயநாடு மக்களின் அவல நிலையை இரக்கத்துடன் கருதி, நிவாரண நிதி மற்றும் மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran