1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (13:34 IST)

அதிகாரிகள் ஏன் கைது செய்யப்படவில்லை – ப.சிதம்பரம் டிவிட்டரில் எழுப்பிய கேள்வி !

திஹார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் டிவிட்டர் கணக்கை அவரது குடும்பத்தினர் பயன்படுத்த அவர் அனுமதி வழங்கியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ காவல் முடிந்த பின்னர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீதான அமலாக்கத்துறை வழக்கில் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதம் செய்தார். ஆனால் இதற்கு சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத் துறை விசாரணை காவலுக்கு செய்ய ப.சிதம்பரம் தயார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் திகார் சிறையில் இருந்த ப சிதம்பரத்தை சந்தித்து வந்துள்ள அவரது குடும்பத்தினர் அவரது டிவிட்டர் கணக்கில் சில பதிவுகளை இட்டுள்ளனர். அதில் ‘என் சார்பாக என்னுடைய குடும்பத்தினரை ட்விட் செய்யக் கேட்டுக்கொண்டேன்’ என ஒரு டிவிட்டும், ,மற்றொரு டிவிட்டில் ‘இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் கைது செய்யப்படவில்லை. நீங்கள் கடைசியாக கையொப்பம் இட்டீர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவா உங்களைக் கைது செய்திருக்கிறார்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள்’ என ஒரு ட்விட் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடைசியாக ஒரு டிவிட்டில் ‘மக்களுக்கு சொல்வதற்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. அதிகாரிகள் யாரும் தவறு செய்யவில்லை. யாரும் கைதாவதை நானும் விரும்பவில்லை’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.