1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (15:41 IST)

ஆன்லைன் சூதாட்டங்களால் தொடரும் தற்கொலைகள்! – தடை செய்ய ஓபிஎஸ் கோரிக்கை!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. முன்னதாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட ஆப்களை தடை செய்ய முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “ரம்மி, போக்கர், லுடோ, கால் ப்ரேக் என பல்வேறு சூதாய்ய செயலிகளின் விளம்பாங்கள் கடந்த சில நாட்களாக நாளிதழ்களில் வெளியாகி வருகின்றன. சினிமா, விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொலைக்காட்சிகளில் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.

அந்த விளம்பரத்திலே இந்த விளையாட்டில் நிதி அபாயங்கள் உள்ளன என்றும் இது ஒரு கட்டாய பழக்கமாக மாறலாம் என்றும் தயவு செய்து பொறுப்புடனும் சுய கட்டுப்பாட்டுடனும் விளையாடவும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே இது சூதாட்டம் என்பது தெள்ளத் தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதனால், ஃபேண்டஸி, லூடோ, போக்கர், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை விதிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் உரிய சட்டம் இயற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.