1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Omicron BA4 Variant identified in tamil nadu

ஒமிக்ரான் BA.4 கொரோனா: தமிழ்நாட்டில் ஒருவருக்கு உறுதி

தமிழகம்
ஹைதராபாத்தை அடுத்து தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கு BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

 
BA.4 என்பது ஒமிக்ரான் திரிபின் ஒரு வகையாகும். ஒமிக்ரான் திரிபை 'கவலைக்குரிய திரிபு' என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளதால் BA.4 வகை கொரோனாவும் அந்த வகைப்பாட்டில் அடங்கும்.
 
சென்னை கிண்டியில் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வந்த கிங்ஸ் மருத்துவமனையை முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
 
அந்த பணிகளை ஆய்வுசெய்யவந்த அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
''செங்கல்பட்டு நாவலூர் பகுதியில் ஒருவருக்கு BA.4 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் சோதனை செய்துள்ளோம். இந்த புதிய வகை கொரோனா ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகளவில் பதிவாகியுள்ளது. சமீபத்தில், ஹைதராபாத்தில் ஒருவருக்கு இருந்ததை உறுதிசெய்தார்கள்.''
 
''இந்த கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதுவரை தமிழகத்தில் ஒமிக்ரான் உள்பட, நான்கு வகை கொரோனா தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பிற மாநிலங்களில் இந்த புதியவகை தொற்று பரவியுள்ளதா என மத்திய அரசு தெளிவுபடுத்தவேண்டும்,''என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.
 
யுக்ரேன் நாட்டில் மருத்துவம் பயின்று வந்த மாணவர்கள் போர் காரணமாக தமிழ்நாடுதிரும்பியுள்ளதால், அவர்கள் இங்கு படிப்பை தொடர முடியுமா என செய்தியாளர்கள் கேட்டனர்.
 
''தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் யுக்ரேனில் படித்த மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் யுக்ரேனில் இருந்து மாணவர்கள் திரும்பியுள்ளனர். அவர்கள் படிப்பை தொடர்வது பற்றி, மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும். இதில் தமிழ்நாடு அரசு தலையீடு செய்யமுடியாது. அந்த மாணவர்களுக்கு சீட் வழங்குவது பற்றி முடிவு எடுப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது,''என்றார் அமைச்சர்.
 
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு திரும்பிய மாணவர்களின் பெற்றோர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
Infinix Note 12 ஸ்மார்ட்போன் எப்படி?