ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2017 (11:04 IST)

ஜெ. அனுமதிக்கப்பட்ட போது உடலில் காயங்கள் இல்லை - அப்போலோ அறிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல் நிலை எப்படி இருந்தது என்பது தற்போது  தெரியவந்துள்ளது.'


 

 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை ஜெ.வின் விவகாரம் தற்போது வரை மர்மமாகவே இருக்கிறது. அவரின் இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஜெ.வின் மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று,  செப்.22ம் தேதி ஜெ.வின் இல்லத்தில் என்ன நடந்தது என்கிற களப்பணியை நடத்தி முடித்துள்ளது. அதில், பல்வேறு விவரங்கள் தெரிய வந்துள்ளன.
 
செப்.22ம் தேதி இரவு 10 மணிக்கு அவருக்கு உடல் நிலை சரியில்ல என அப்போலோ மருத்துவமனைகு தொலைப்பேசி அழைப்பு சென்றுள்ளது. அதையடுத்து, 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடனடியாக  போயஸ்கார்டன் விரைந்து சென்று, அவரின் உடல் நிலையை பரிசோதித்துள்ளது. 
 
அப்போது அவரது உடல் நிலையை மருத்துவர்கள் சோதித்துள்ளனர். அதில், சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 140/70 ஆக இருந்துள்ளது. அதேபோல், 72 ஆக இருக்க வேண்டிய இதயத்துடிப்பு 80 ஆக இருந்துள்ளது. மேலும், 120 எம்.ஜி.ஆக இருக்க வேண்டிய சர்க்கரை அளவு, அதிக பட்சமாக 508 ஆக இருந்துள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, அவரது உடலில் ஆக்சிஜன் அளவு வெறும் 48 ஆக இருந்துள்ளது. 90க்கு கீழே சென்றால் கூட மூச்சு தினறல் ஏற்படும் என்பது மருத்துவர்களின் கருத்து.
 
அதன் பின்பு அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். 
 
இவை அனைத்தும், அப்போலோவில் ஜெ. அனுமதிக்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 
 
அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு, ரத்த அழுத்தம், நிமோனியா காய்ச்சல், நுரையீரல் தொற்று மூச்சுத் திணறல் ஆகியவை இருந்துள்ளது. முக்கியமாக, அப்போது அவரது உடலில் புண்களோ, காயங்களோ எதுவும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஜெ. அப்போலோவில் இருந்த போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் போயஸ்கார்டன் வீட்டில் அவர் தாக்கப்பட்டார் என்ற செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது உண்மையல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.