1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (15:36 IST)

அமைச்சர் தங்கமணிக்கு போன் போட்டு நலம் விசாரித்த ஸ்டாலின்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்.
 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஐந்து பேருக்கும், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
 
இந்நிலையில் தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
தொற்று உறுதியாகும் முன்னர் வரை, அதாவது நேற்று முன் தினம் வரை அதிமுக கட்சி சார்ந்த கூட்டங்கள், நாமக்கலில் நடந்த நிவாரண பொருட்கள் வழங்கும் கூட்டம் உள்ளிட்டவற்றில் அமைச்சர் கலந்து கொண்டுள்ளார். 
 
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, 
 
கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன்.
 
பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார்.