செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:31 IST)

எடப்பாடியாருக்கு துணிச்சல் பத்தாது; நாங்களே களம் இறங்குறோம்! – ஸ்டாலின் போராட்ட அறிவிப்பு

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுனருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுனர் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டு மாதங்கள் ஆகியும் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.

இந்நிலையில் முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலிம் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசுடன் இணைந்து போராட தயார் என கூறியிருந்தார். அவரது அறிவிப்புக்கு பதில் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது திமுக தலைமையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க கோரி ஆளுனர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “மருத்துவக் கல்வியில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை; அழுத்தம் தராமல் துரோகம் இழைக்கிறது அதிமுக அரசு! இணைந்து போராட அழைத்தேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணிச்சல் இல்லை! களம் காண்கிறது திமுக! அக்.24-இல் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்! மாணவர் நலன் காப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.