வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (15:21 IST)

இனி ’அந்த’ பேச்சு எழாது – ஜெயக்குமார் உறுதி !

அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது இனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு எழாது எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பேசியது அக்கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜன் செல்லப்பா ஓபிஎஸ் சொல்லிதான் அப்படி பேசுகிறார் என்று பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனையடுத்து  அதிமுகவுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளை தீர்க்க அவசரமாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்று எடப்பாடி ஆதரவாளர்கள் அவருக்குப் போஸ்டர் அடித்து ஒட்டியதால் மேலும் பரபரப்பு உருவானது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று காலை தொடங்கிய இந்தக் கூட்டம் ஆரம்பித்து வெறும் ஒன்றரை மணிநேரத்தில் முடிந்தது. கூட்டத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மட்டுமே பேசியிருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை பற்றி யாருமே எதுவும் பேசவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் கூட்டம் முடிந்து வெளியில் வந்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘இது தேர்தலுக்குப் பிறகு நடக்கிற பொதுவானக் கூட்டம்தான். ஒற்றைத் தலைமைக் குறித்து பேச்சு எழுந்ததால் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளோம். மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பது குறித்து எதுவும் பேசவில்லை. இனி ஒற்றைத் தலைமைக் குறித்து பேச்சு எழ வாய்ப்பில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.