வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (11:56 IST)

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு: கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு கால அவகாசத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் நீட்டித்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 28,819 அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியல் மாணவர்கள் மற்றும் 13,417 நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தகுந்த இடங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களில் பலர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். இருந்தபோதிலும், கலந்தாய்வு முடிவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 399 எம்பிபிஎஸ் மற்றும் 727 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன.

காலியாக உள்ள இடங்களில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 23 பிடிஎஸ் இடங்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,024 எம்பிபிஎஸ் மற்றும் 839 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் 16 வரை https://tnmedicalselection.net/ தளத்தில் நடத்தப்பட்டது. மேலும், சில மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு மூலம் இடங்களை பெற்றுள்ளனர். கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காலியாக உள்ள இடங்களை நிரப்பும் நோக்கில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 20 முதல் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு விவரங்கள் 26-ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் அக்டோபர் 5-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Mahendran