1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (13:22 IST)

அம்மனுக்கு காய்ச்சிய கூழில் விழுந்து பக்தர் பலி! – மதுரையில் சோக சம்பவம்!

மதுரையில் அம்மனுக்கு கூழ் காய்ச்சும் விழாவில் பக்தர் ஒருவர் கொதிக்கும் கூழில் விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று அம்மன் கோவிலில் கூழ் காய்ச்சும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதற்காக பொதுமக்களிடம் அரிசி, பணம் உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு பொருட்கள் வாங்கி கூழ் காய்ச்சி மக்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டிருந்துள்ளனர்.

கூழ் காய்ச்சும் பணியில் முருகன் என்ற நபரும் ஈடுபட்டிருந்துள்ளார். கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுமாறிய முருகன் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்த பெரிய பாத்திரத்திற்குள் விழுந்தார்.

கொதிக்கும் கூழில் விழுந்து துடித்த அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுயில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.