1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (11:46 IST)

என் பின்னாடி ஒரு சமுதாயமே இருக்கு: ஜெயக்குமாருக்கு சவால்விட்ட கருணாஸ்

ஜாதிக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய கருணாஸை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு கருணாஸ் பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு மீண்டும் ஜாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியிருக்கிறார்.
 
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார். 
 
தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.  அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.  
 
கொலை செய்தாலும் என்னிடம் சொல்லி விட்டு செய்யுங்கள். காலையில் பல் துலக்குவதற்குள் கொலையை செய்து விடுவோம். எந்த ஜாதிக்காரனும் மூன்று முறை முதல்வர் ஆகவில்லை. எங்கள் தேவர் இனம்தான் மூன்று முறை முதல்வர் பதவியை வகித்தது என தனது ஜாதியை முன்னிறுத்தி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இதையடுத்து கருணாஸின் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவதூறாக பேசுவது, மிரட்டுவது, கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருணாஸ் மீது பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர்.
 
இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய கருணாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய கருணாஸ், ஜெயக்குமார் என்ன அரிச்சந்திரனா? என் மீதான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நான் தயார். என் சமுதாய மக்கள் என்னோடு இருக்கிறார்கள் என பேசியுள்ளார். மீண்டும் மீண்டும் கருணாஸ் ஜாதி பெருமையை பேசி கலவரத்தை தூண்ட நினைக்கிறார் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறி வருகின்றனர்.