1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (18:02 IST)

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் உத்தரவு; ”தமிழக அரசை வரவேற்கிறேன்”.. கனிமொழி டிவீட்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடி செய்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயுள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்துள்ள நிலையில் திமுக எம்.பி. கனிமொழி இந்த உத்தரவை வரவேற்றுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 100 இடங்களுக்கு தகுதி பெற்றோர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது சர்ச்சையானது.

இது குறித்து நடைபெற்ற விசாரணையில் தேர்வர்கள் முறைகேடான வழியில் தேர்ச்சி பெற இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்ததாகவும், மேலும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்ய சொல்லியும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சில மணி நேரங்களிலேயே அழிந்துவிடும் விசேஷ பேனாவை கொண்டு விடைகளை குறித்தது மட்டும் அல்லாமல், அந்த மையங்களில் பணியில் இருந்த நபர்களுடன் இணைந்து இடைத்தரகர்களும் சரியான பதிலை குறித்து மற்ற தாள்களுடன் இணைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மோசடி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களையும் இனி ஆயுளுக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை தேர்வு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் ”குரூப் 4 முறைகேடு குறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை வரவேற்கும் அதே நேரத்தில் லட்சக்கணக்கான தேர்வாளர்கள் நம்பி இருக்கும் டிஎன்பிஎஸ்சியில்  இனி முறைகேடு நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை தேவை” என கூறியுள்ளார்.