வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (10:59 IST)

பொம்மை துப்பாக்கின்னு நினைச்சியா?- துப்பாக்கியை காட்டி மிரட்டிய கபாலி

பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஆண் துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோவும், அதை தொடர்ந்து ஒரு பெண் தன்னை காப்பாற்றும்படி கூறும் ஆடியோவும் வாட்ஸ் அப் மூலமாக வேலூர் பகுதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த ஆண் “நேரில் பார்த்தால் உன்னை சுட்டு தள்ளிடுவேன். பொம்மை துப்பாக்கியென்று நினைச்சியா?” என்று அசிங்கமாக பேசுகிறார்.  

தொடர்ந்து அந்த ஆடியோவில் அந்த பெண் “என் பெயர் மலர். எனது ஊர் திருசெங்கோடு. எனது முதல் கணவர் மூலமாக எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரை விட்டு பிரிந்த பிறகு மலேசியாவில் வேலை பார்த்து வந்தேன். விடுமுறையில் ஊருக்கு வந்தபோது காட்பாடியை சேர்ந்த கபாலீஸ்வரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அவர் என்னை கொடுமைப்படுத்தினார். அதனால் அவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்துவிட்டேன். ஆனால் காபாலீஸ்வரன் தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார். இப்போதுகூட துப்பாக்கியை காட்டி மிரட்டி வீடியோ அனுப்பி உள்ளார். அவரிடம் இருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என பேசியுள்ளார்.

இந்த வாட்ஸப் வீடியோ பற்றி தகவலறிந்த போலீஸார் உடனடியாக மலரை தொடர்பு கொண்டனர். அவர் அளித்த புகாரின் பேரில் வேலூரை சேர்ந்த கபாலி எனப்படும் கபாலீஸ்வரனை போலீஸார் கைது செய்ய சென்றனர். அப்போது தன்னிடமிருந்த துப்பாக்கியை காட்டி போலீஸையே கபாலி மிரட்டியதாக கூறப்படுகிறது.

கபாலியை கைது செய்து விசாரித்தபோது முதல் மனைவி 6 வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டதாகவும், அதன்பிறகு முகநூலில் அறிமுகமான மலரை இரண்டாவது முறையாக கபாலி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் “பொம்மை துப்பாக்கின்னு நினைச்சியா?” என்று சொல்லி வீடியோவில் காட்டிய அந்த துப்பாக்கி உண்மையாகவே பொம்மை துப்பாக்கிதான் என்பதும் தெரிய வந்துள்ளது.