1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (13:21 IST)

உங்க அப்பன் வீடு சொத்தா என்று கேட்பது சரி அல்ல.! வி.கே.சசிகலா

தமிழ்நாட்டிற்கு வேண்டிய நிதியை மத்திய அரசிடம் முறையாக கேட்டு பெற வேண்டுமே தவிர, உங்க அப்பன் வீடு சொத்தா என கேட்பது சரியல்ல என்று  வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி. நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு வி.கே. சசிகலா மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  எம். ஜி.ஆர் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்றார்.  எம். ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் எந்த முறை கையாளபட்டதோ அதே முறையை நானும் கையாலுகிறேன் என அவர் தெரிவித்தார்.
 
இப்போது தமிழகத்தில் நடக்க கூடிய ஆட்சியால் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர் என்றும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து வருகின்றனர் என்றும் சசிகலா கூறினார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான திட்டம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், ஒரு அமைச்சருக்கு பல பொறுப்புகள் வழங்கினால் எப்படி அவர்கள் பணி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
 
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை, எல்லா விரலும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் சசிகலா தெரிவித்தார்.
 
தமிழ் நாட்டிற்கு வேண்டிய நிதியை மத்திய அரசிடம் முறையாக கேட்டு வாங்க வேண்டும் என்றும் அப்படி இல்லாமல் உங்க அப்பன் வீடு சொத்தா என்று கேட்பது சரி அல்ல  என்றும் சசிகலா கூறினார்.