1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (13:55 IST)

போதை பொருள் குஜராத்தில் தான் அதிகம்..! ஆர் எஸ் பாரதி...

RS Bharathi
போதைப்பொருள் அதிகமாக இருப்பது குஜராத்தில்தான் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டி உள்ளார்.
 
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கையாள முடியாமல் திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி பழிபோடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
 
திமுக அரசை அனைத்து தரப்பினரும் பாராட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் பழனிசாமி போராட்டம் நடத்துகிறார் என்றும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
 
தமிழ்நாட்டில்தான் போதைப்பொருள் அதிகமாக இருப்பதை போல அண்ணாமலை பேசுகிறார் என்றும் இந்தியாவிலேயே அதிகமாக போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத் என்றும் ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டினார்.
 
அதிமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பதுபோல் எடப்பாடி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
 
அதிமுக ஆட்சியில்தான் டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது குட்கா வழக்கு தொடரப்பட்டது என்றும் யாரோ ஒருவர் செய்ததற்காக ஒட்டுமொத்த திமுகவையும் குறை சொல்லக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் மீது கூட அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் திமுக ஆட்சியில் தவறுசெய்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆர் எஸ் பாரதி கூறினார்.
 
போதைப்பொருள் விற்பனையில் ஐ.டி. நிறுவன பணியாளர்கள் ஈடுபடுவதாக பழனிசாமி அபாண்டமான குற்றச்சாட்டை கூறுகிறார் என்றும் ஐ.டி. பணியாளர்களை இழிவுபடுத்தி பேசியதற்காக பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் ஆர்.எஸ். பாரதி எச்சரித்துள்ளார்.
 
போதைப்பொருள் வழக்கில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றவரையே அமித் ஷா பா.ஜ.க.வில் சேர்த்துள்ளார் என அவர் விமர்சித்தார்.


2016 தேர்தலின்போது அதிமுக ஆட்சியில்  ரூ.570 கோடி பணத்துடன் கன்டெய்னர் பிடிபட்ட நிலையில் 8 ஆண்டுகளாகியும் சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டினார். மார்ச் 7-ம் தேதிக்குள் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.