1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Erode East By-Election: BJP Alliance Boycott

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக கூட்டணியும் புறக்கணிப்பு..!

Annamalai
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஏற்கனவே அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் தற்போது மற்றொரு எதிர் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் புறக்கணித்து உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், போலீசார் என யாருக்குமே பாதுகாப்பின்மை என தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர் எதிரக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை , Disaster மாடல் என உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொது மக்களை பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், தி.மு.க.,வை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே தே.ஜ., கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்கள் அடைத்து வைக்க தி.மு.க.வை அனுமதிக்க தே.ஜ., கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தே.ஜ., கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் நன்கு ஆலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை அகற்றி மக்களுக்கான தே.ஜ., கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு.

 இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஸ்பெஷல் கும்பமேளா.. குவிந்த கோடிக்கணக்கான பக்தர்கள்..!