1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:35 IST)

அதிமுகவை வீழ்த்த நினைத்தால் வீழ்ந்து போவார்கள்! – எடப்பாடியார் எச்சரிக்கை!

திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அதிமுக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதிமுகவை வீழ்த்த முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தற்போது பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களின் அடிப்படை தேவைகள் விஷயத்தில் கவனம் செலுத்தாமல் திமுக அலட்சியம் செய்வதாகவும், வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுகவை எதிர்த்து மாநில அளவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக 12ம் தேதி நடத்த இருந்த போராட்டம் பின்னர் 17ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று திமுக அரசை கண்டித்து அதிமுக தமிழக அளவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி “அதிமுக மீது அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். எங்களை தொந்தரவு செய்தால் எதையும் சந்திக்க தயார், திமுகவின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டோம், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் பணி தொடரும். தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு விரைந்து நிறைவேற்றவில்லை எனில் அதனை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களை தொடருவோம்” என்று தெரிவித்துள்ளார்.