1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2020 (17:32 IST)

ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு: கனிமொழி கோரிக்கை

மின்சாரத்தை விட மின்கட்டணம் ஷாக் அடிப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வரும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கணக்கீடு செய்வதற்கு பதில் ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
பன்மடங்கு மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எப்படி இந்த அளவுக்கு கட்டணம் உயர்ந்தது என்ற கேள்விக்கே சரியான விளக்கம் கிடைக்காத நிலையில், மின்கட்டணத்திற்கான அவகாசத்தையும் வழங்க மறுத்து வஞ்சிக்கிறது அதிமுக அரசு. 
 
இதுபோன்ற மின்கட்டண பிரச்சனைக்கும், குழப்பங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு செய்வதே தீர்வாக அமையும். இதனை கடந்த 2016 சட்டமன்றத்  தேர்தல் அறிக்கையிலேயே திமுக முன்வைத்தது. இதன்மூலம் பொதுமக்களின் மின்கட்டண சுமையை  தவிர்க்க முடியும். எனவே, அதிமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.
 
கனிமொழியின் இந்த கோரிக்கையை மின்சார துறை அமைச்சரும், தமிழக அரசும் நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்