செவ்வாய், 22 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:23 IST)

கும்பாபிஷேகத்தின் போது திடீரென கலசத்தில் வானத்திலிருந்து பொழிந்த மழை நீர்.....

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் இந்து  சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மிகவும் பழமையான இக்கோவில் கும்பாபிஷேகம்  வெகு விமர்சையாக நடைபெற்றது.
 
இதனை முன்னிட்டு  கடந்த 20ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து விமான கும்பத்தை  அடைந்தது. 
 
தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
 
இதில் தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பூம்புகார் எம் எல் ஏ நிவேதா முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.
 
முன்னதாக கும்பாபிஷேகத்தின் போது கனமழை பெய்த போது கொட்டும் மழையில் பக்தர்கள்  கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.