1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (15:50 IST)

போதைப்பொருள் கடத்தல் தமிழகத்திற்கு தலை குணிவை ஏற்படுத்துகிறது! - எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

sp velumani
திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் அதிமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியார்  கடுமையான அறிக்கைகள் மூலம் தமிழக மக்களை காப்பாற்றி கொண்டிருபதாக கூறினார். திமுக நிர்வாகி 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என கூறிய அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளிலும் கஞ்சா விற்கிறார்கள் என்றார்.

தமிழகத்தில் மாணவர்களையும் இளைஞர்களையும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள் எனவும் திமுக பொறுப்பாளர்களும் கஞ்சா விற்கிறார்கள் என விமர்சித்தார். கஞ்சா விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை எனவும் கூறினார்.

மத்திய அரசு கஞ்சா விற்பனையை கண்டுபிடித்து கட்டுப்படுத்த வேண்டும் எனவும், திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை என்றார். விளம்பரத்தில் மட்டுமே இந்த அரசு உள்ளது எனவும் விமர்சித்தார். திமுக அரசு செய்தது எல்லாம் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்தியது தான் என கூறினார்.

மேலும் 38 எம்பி களும் தெண்டமாக இருக்கிறார்கள் என்றார்.  அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த பிரச்சனை பற்றியும் பேசவில்லை. 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜெயித்த 38 எம்.பி.க்கள் எதுவும் செய்யாமல் தெண்டமாக உள்ளார்கள் என எம்பி களை விமர்சனம் செய்தார்.

 
நாடாளுமன்ற தேர்தல் வருவதால் டிசைன் டிசைனாக வந்து திமுகவினர் ஏமாற்றுவார்கள் எனவும் திமுக அரசு மகளிர் உரிமை தொகை பாதி பேருக்கு தான் தந்துள்ளார்கள், அது திமுக குடும்ப பணம் இல்லை, உங்கள் பணத்தை தான் கொடுக்கிறார்கள் என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கொடுப்பார் என தெரிவித்தார்.   எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என ஒட்டுமொத்த மக்கள் நினைக்கின்றனர்.

கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அதற்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் எனவும் கூறினார்.   பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போகி விடும் என கூறிய அவர் அது திமுகவிற்கு சாதகமாகி விடும் என்றார். ஒவ்வொரு ஓட்டையும் இரட்டை இலைக்கு போட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும் என கூறினார்.