1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (18:03 IST)

விதிமீறல் கட்டிடங்களுக்கு கருணை காட்டக்கூடாது..! நீதிபதிகள் கருத்து..!!

Madurai Court
அரசின் விதி முறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு ஒரு போதும் கருணை காட்டக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் கடந்த 2011-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 
இந்த மனு மீது ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி 9 மீட்டருக்கும் உயரமாக  கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர்களை  நியமித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி வழக்கறிஞர்கள் ஆணையம் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையும் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு பல ஆண்டுகளாக விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 9 மீட்டருக்கு மேல் உயரமாக  விதிமீறி கட்டபட்டுள்ள  கட்டிடங்கள் எத்தனை என்று கேள்வி எழுப்பினர். அரசின் விதி முறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு ஒரு போதும் கருணை காட்டக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள்,  எத்தனை கட்டிடங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

 
விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கை, என்ன விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.