ஏதாவது பிரச்சனை வந்தால் அதில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சி திமுக: ராஜேந்திர பாலாஜி..
திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "எங்கேயாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் கட்சியாகவே திமுக செயல்படுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:
திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றியே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குகளைப் பெறுகிறார். வரும் தேர்தலில் திமுகவின் நாடகங்கள் எதுவும் எடுபடாது. அக்கட்சியை வீழ்த்துவதற்காக எடப்பாடி பழனிசாமி பலமான கூட்டணி அமைத்துள்ளார். இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
நடிகர் விஜய் திமுகவைத்தான் கடுமையாக எதிர்க்கிறார். எனவே, திமுகவை தோற்கடிக்கக்கூடிய அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும்.
பொதுக்கூட்டங்களில் கூடும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் அவற்றை தடுத்து நிறுத்தும் பணியைத்தான் திமுக அரசு செய்கிறது. இது கண்டிக்கத்தக்கது. கரூர் கூட்டத்திற்கும் திமுக அரசு தகுந்த பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Edited by Mahendran