1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (14:22 IST)

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - பின்னணி என்ன?

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தகூடாது என நீதிமன்றம் கூறிவிட்டதால், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.


 

 
தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
 
அந்த கூட்டத்தில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் முதல்வர், சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
அதோடு, நீதிமன்ற தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என கருதிய திமுக தரப்பு இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது. அதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் இன்று சென்னையிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
அந்நிலையில், இன்று மாலை தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்கவில்லை. ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை இந்த வழக்கை ஒத்தி வைத்தது.
 
இந்நிலையில், இன்று மாலை நடைபெறவிருந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.