1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (11:57 IST)

அணி மாறும் எம்.எல்.ஏக்கள்? ஆட்சி அமைப்பாரா எடப்பாடி?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களில் சிலரை தங்கள் பக்கம் வளைக்கும் முயற்சியில் தினகரன் மற்றும் திமுக தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
தினகரன் பக்கம் உள்ள 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை அடுத்து தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் உள்ள எடப்பாடி அரசு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்து விட்டு,  நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தை திட்டமிட்டுள்ளது.
 
சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளது தினகரன் தரப்பு. ஏற்கனவே, திமுக தொடர்ந்த வழக்கில் செப்.20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், 21ம் தேதிக்கு பின் வாக்கெடுப்பு நடத்தினால் எடப்பாடி அரசே ஆட்சியில் நீடிக்கும் என்கிற சூழ்நிலை இருக்கிறது.
 
பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். இன்று மாலை அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பேச உள்ளார். எனவே, எடப்பாடிக்கு ஆதரவாகவே ஆளுநர் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.


 

 
இந்நிலையில், எடப்பாடி அரசை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என திமுக மற்றும் தினகரன் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தினகரன் ஒரு பக்கம், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் தங்களுக்கு நெருக்கமான எம்.எல்.ஏக்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார்களாம். 
 
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எடப்பாடி அரசுக்கு 108 எம்.எல்.ஏக்கள் வேண்டும். எனவே, ஆனால், அவரிடம் தற்போது 110 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அதிலிருந்து 4 எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து விட்டாலே ஆட்சி கவிழ்ந்து விடும் என திமுக மற்றும் தினகரன் என  இரண்டு தரப்புமே கணக்கு போட்டு காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.
 
ஒரு பக்கம் திமுகவும், ஒரு பக்கம் தினகரனும், மறுபக்கம் திவாகரனும் எம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விஷயம் உளவுத்துறை மூலம் பழனிச்சாமிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வ்வர், எனக்கு சில எம்.எல்.ஏக்கள் மீது சந்தேகம் இருக்கிறது. அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனியுங்கள். அதில் யாரும் அவர்கள் பக்கம் மாற வாய்ப்பிருந்தால் என்னிடம் சொல்லுங்கள். அவர்களை நான் அழைத்து பேசுகிறேன் என முதல்வர் கூறியுள்ளாராம்.