1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (12:42 IST)

கடன் தர மாட்டேன்னு சொல்வியா! - வங்கி ஊழியர்களை தாக்கிய ஆசாமி!

கோயம்புத்தூரில் கடன் தர மறுத்த வங்கி ஊழியர்களை ஆசாமி ஒருவர் கத்தியை கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கனரா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் கடன் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார் வெற்றிவேலன் என்ற வாடிக்கையாளர். ஆனால் அவருக்கு கடன் பெற்று தருவதாக இடைத்தரகர் ஒருவர் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. பல முறை கடன் கேட்டு வங்கிக்கு அலைந்தும் வெற்றிவேலனுக்கு கடன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேலன் கத்தியுடன் வங்கிக்குள் நுழைந்திருக்கிறார். அங்கு இருந்த வங்கி மேலாளர் மற்றும் தன்னிடம் பணம் பெற்ற இடைத்தரகர் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலை கண்டு வங்கியில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வங்கி செக்யூரிட்டிகள் சுதாரிப்பதற்குள் தாக்கி விட்டு தப்பி ஓடியிருந்திருக்கிறார் வெற்றிவேலன்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் வெற்றிவேலனை கைது செய்துள்ளனர் போலீஸார். கடன் தர மறுத்த வங்கி அதிகாரியை ஆசாமி ஒருவர் கத்தி கொண்டு தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.