1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (23:55 IST)

கிரிக்கெட்: இந்தியாவை சோதித்த ஆஸ்திரேலியா - மைதானத்துக்கு ஆஸி. பிரதமருடன் வந்த நரேந்திர மோதி

Pm Modi Sad
ரஹானே தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணிலேயே இந்தியா பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொரை வென்றது நினைவிருக்கிறதா? அந்த தொடரில் இந்தியா மகுடம் சூடியபோது நாடே கொண்டாடியது.
 
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் அதை கச்சிதமாக நிகழ்த்திக் காட்டினார் அஹிங்கியா ரஹானே.
 
அந்த தொடர் அளித்த பரபரப்பு தற்போது மீண்டும் தொற்றியிருக்கிறது. இந்த முறை ஆமதாபாத்தில்....
 
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. ஆனால் இந்தூர் டெஸ்ட் இந்தியா பக்கம் வீசிய மகிழ்ச்சிக் காற்றை திசை திருப்பியது.
 
மோசமான தோல்விக்குப் பிறகு தற்போது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது இந்தியா. இந்த போட்டியில் தோற்றால் டெஸ்ட் தொடரை வேண்டும் என்றால் சமன் செய்யலாம் ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு கரைந்துபோய்விடும்.
 
இப்படியொரு இக்கட்டான தருணத்தில், ஆமதாபாத்தில் நடைபெற்ற 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முந்தைய 3 டெஸ்ட்களை காட்டிலும் இந்த டெஸ்டின் முதல் பகுதி, (session) இந்தியாவுக்கு சற்று சோர்வை தந்திருக்கிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளை விட இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களை களைப்படையச் செய்திருக்கிறது.
 
ஆறாவது ஓவரில் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. ஆனால் இந்திய விக்கெட் கீப்பர் பரத் தவறவிட்டார்.
 
இருப்பினும் டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத் தொடங்கியபோது அஸ்வினின் சுழலில் சிக்கினார். லபுசேன் 3, ரன்களில் முகமது ஷமியிடம் ஆட்டமிழந்தார்.
 
19 ரன்கள் இடைவெளியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்திருந்தது. அனுபவம் வாய்ந்த அஷ்வின், ஷமி இருவரும் அந்த விக்கெட்டை எடுத்திருந்தது. ஆனால், கவாஜா இந்திய பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டார்.
 
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
சுழல், வேகப்பந்துவீச்சு என இரண்டிலும் நேர்த்தியாக செயல்பட்டார்.
 
ஸ்டீவ் ஸ்மித், கவாஜா ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு கடுமையான தலைவலியை கொடுத்தனர். ஸ்மித்தை வீழ்த்த ஜடேஜாவை பயன்படுத்தினார் கேப்டன் ரோஹித்.
 
64வது ஓவரை ஜடேஜா வீச துல்லியமான சுழலில் சிக்கிய விக்கெட்டை பறிகொடுத்தார் ஸ்மித்.
 
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவிடம் 7வது முறையாக அகப்பட்டிருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் சுமித்.
 
38 ரன்களை எடுத்திருந்த ஸ்மித், 135 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். மறுபுறம், 146 பந்துகளை விளையாடி பொறுமையாக அரைசதம் அடித்தார் உஸ்மான் கவாஜா.
 
முதல் நாள் ஆட்டம் முடிய 9 ஓவர்கள் இருந்தபோது இந்தியாவுக்கு புதிய பந்து கிடைத்தது. ஆனால் அது பந்துவீச்சாளர்களுக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை என்பது புதிய பந்தில் வீசப்பட்ட முதல் ஓவரில் ஆஸ்திரேலியா விளாசிய இரண்டு பவுண்டரிகள் மூலம் தெரிந்தது.
 
புதிய பந்தில் வீசப்பட்ட 9 ஓவர்களில் 54 ரன்களை விளாசித் தள்ளியது ஆஸ்திரேலியா.
 
இதில் பெரியளவில் அச்சுறுத்தியது கேமரூன் க்ரீனின் ஆட்டம். 64 பந்துகளில் 49 ரன்களை சேர்த்திருந்தார் கேமரூன்.
 
ஆட்டத்தின் கடைசி ஓவரில் உஸ்மான் கவாஜா சதம் விளாசினார். நடப்பு தொடரில் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் மட்டுமின்றி, 2017இல் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்த பிறகு இந்திய மண்ணில் சதம் அடிக்கும் ஆஸ்திரேலியர் என்கிற பெருமையை படைத்திருக்கிறார் கவாஜா.
 
போட்டி முடிந்ததும் கவாஜா உதிர்த்த வார்த்தைகள் முக்கியமானவை. சதம் விளாசிய கையோடு பேசிய கவாஜா, இந்தியாவுக்கு 2 முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன்.
 
அப்போது நடந்த 8 போட்டிகளிலுமே நான் வீரர்களுக்கு குடிநீரையும் ஜூஸ் பாட்டில்களையும் சுமந்தேன். ஆனால் இப்போது நான் சதம் விளாசியிருப்பது ஒரு உணர்வுபூர்வமான தருணம் என குறிப்பிட்டார்.
 
சுமார் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக தனது விக்கெட்டை பத்திரப்படுத்தி ஆடியிருக்கிறார் கவாஜா.
 
246 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
 
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களை சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
 
இனி வரும் நாட்களில் இந்தியா ஆடும் விதத்தை பொறுத்தே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதி யுத்தம் தீர்மானிக்கப்படும்.
 
ஆமதாபாத்தில் இந்தியா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. காரணம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகளே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதும்.
 
முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளன.
 
ஆனால் 3வது இடத்தில் உள்ள இலங்கை அணி, தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
 
இலங்கை அணி தற்போதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
 
இலங்கை அபாரமாகவும் இந்தியா சொதப்பலாகவும் விளையாடும் பட்சத்தில், இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு இந்த முறையும் எட்டாமல் போகலாம்.
 
எந்தவித பரப்பரப்புமின்றி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டும் எனில் ஆமதாபாத் டெஸ்டை இந்தியா வெல்ல வேண்டியது மிக மிக கட்டாயம்.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி - ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் ஆகிய இருவரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியை காணச் சென்றனர்.
 
மைதானத்தை வலம் வந்த இரு தலைவர்களும் ரசிகர்களை நோக்கி கை அசைத்தனர். தங்கள் நாட்டு அணி கேப்டன்களுக்கு பிரதமர்கள் தொப்பியை வழங்கி கெளரவித்ததோடு அவர்களுடன் கைகளைக் கோர்த்து உயர்த்தித் தூக்கினார் பிரதமர் மோதி.
 
ரோஹித் சர்மாவுக்கும் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கலாம். இதை எதிர்பார்க்காத இருவரும் சிரித்தபடியே பிரதமர்களுடன் கைகோர்த்து நின்றனர். இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா, இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வீரர்களுடன் நின்றார் பிரதமர் மோதி.
 
போட்டி தொடங்கியதும் இரு தலைவர்களும் மைதானத்தில் இருந்து விடைபெற்றனர். இந்த நிகழ்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 75 ஆண்டுகால நட்பை பிரதமர் நரேந்திர மோதியுடன் கிரிக்கெட்டோடு கொண்டாடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
 
களத்தில், உலகின் சிறந்த அணிகளான ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகின்றன. களத்தில் வெளியே, நாம் இருவரும் சிறந்த உலகை கட்டமைக்க ஒத்துழைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
 
இதேபோல, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியா, ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்குமே ஆர்வத்தோடு ரசிக்கும் விளையாட்டு கிரிக்கெட். ஆமதாபாத்தில் எனது நண்பர் ஆந்தோனியுடன் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை காணச் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இது ஒரு சிறந்த ஆட்டமாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.