வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 11 ஜனவரி 2019 (18:55 IST)

ஜல்லிக்கட்டு வழக்கு சமாதானம் - களைகட்டும் அவனியாபுரம்

ஜல்லிக்கட்டு நடத்துவதில் அனைத்து சமுதாய மக்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டுமென்ற வழக்கை நீதிமன்றம் சமாதானமாக முடித்து வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியப் பண்டிகைகளின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கம். ஆனால் இடையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்துவதாக பீட்டா போன்ற அமைப்புகள் வைத்த குற்றச்சாட்டால் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அதற்கு எதிராக மக்கள் தமிழகம்  முழுவதும் போராடி தடையை நீக்கி அரசை புதிய சட்டமியற்ற வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக அதற்குத் துளியும் சம்மந்தமில்லாத சென்னை மக்களும் ஜாதி பாகுபாடு பார்க்காமல் போராடினர். ஆனால் ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதியப் பாகுபாடுகள் இருந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவும் கலந்துகொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதை உறுதிப்படுத்தும் விதமாக மதுரை அவனியாபுரத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டதை அடுத்து சர்ச்சை ஆரம்பமானது.

இது சம்மந்தமாக அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர்  தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைவரையும் இணைத்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்ற கோவிந்தராஜின் வாதத்தை ஏற்றனர்.

அதைத் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் விழாக்குழுவின் எண்ணிக்கை 24-லிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை சமாதானமாக முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருந்த அனைத்துப் பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்துள்ளன.