1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Court cancelled actors petition become issue

நடிகர்களின் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுக்கு இடைக்காலத் தடை..

Surya
பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு பிறப்பித்த பிடிவாரண்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.


 

 
கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை வீசிய சம்பவமாக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அமைந்தது. கைது செய்யப்பட்ட நடிகை புவனேஷ்வரி தனது வாக்குமூலத்தில் சில மேலும் நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறியதாக ஊடகங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது. 
 
இதனை பார்த்து சினிமா உலகம் கொந்தளித்தது. பத்திரிகைகளுக்கு எதிராக வாய்க்கு வந்தவாறு பேசினர். மேலும் அந்த நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டன கூட்டம் நடத்தினர் நடிகர் நடிகைகள். 
 
இந்த கண்டன கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்களை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினர். இதனையடுத்து மிகவும் மோசமாக பேசிய நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், சத்தியராஜ், சூர்யா, அருண் விஜய், சரத்குமார், விவேக், சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. 
 
இந்த வழக்கின் விசாரணை நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு சம்மந்தப்பட்ட நடிகர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகவில்லை. இதனால் நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் கடந்த 23ம் தேதி, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது நீலகிரி குற்றவியல் நீதிமன்றம்.
 
அந்நிலையில், தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களும் உதகை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால், அந்த மனுக்களை உதகை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், வருகிற ஜூன் 17ம் தேதி சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களும் நீதிமன்றத்தில்  ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தனர்.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
பழிவாங்கும் நோக்கத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு: ஜாமீனில் வெளிவந்த வைகோ குற்றச்சாட்டு