ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2019 (16:17 IST)

நடிகர் ’ விஜய்யை’ நிராகரித்த காங்கிரஸ் ...இன்று ஆதரவளிப்பது ஏன் ? அரசியல் பின்னணி என்ன ?

பிகில் ஆடியோ ரிலீஸ் விழா நடந்த கல்லூரிக்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவு அளித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டியளித்துள்ளார்.
விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட விஜய் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினாலும் மத்தியில் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை மறைமுகமாக சாடியது விவாதப் பொருளாகியது.
இந்நிலையில், இன்று,  பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை அனுப்பியுள்ள  நோட்டீஸை திரும்பப் பெறவேண்டுமென காங்கிரஸ் தரப்பில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இன்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கூறியுள்ளதாவது :
 
பிகில் இசை வெளீயீட்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு விளக்கம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸை திரும்ப பெற வேண்டும் ; இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் !
நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். பல லட்சக்கணக்கான ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட இளம் கலைஞன். நடிகர் நடிகர் விஜய் பொதுவாக கூறிய கருத்தை. அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு எதிராகப் பேசியதாகப் புரிந்துகொண்டுள்ளார், மேலும் பிகில் ஆடியோ நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்   எனக் கூறியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர், விஜய் தன் மக்கள் இயக்கத்தை காங்கிரஸ் கட்சியில் இணைக்க முயன்றதாகவும், அதற்காக பேச்சுவார்த்தைகளை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்தான் முன்னெடுத்துச் சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுலிடம் இதுகுறித்து கூறியதாகப் பேச்சுக்கள் அடிபட்டது.
 
அதன்பின்னர், காங்கிரஸ் கட்சியின் தமிழக இளைஞர் தலைவராக விஜய்க்கு பதவி வேண்டியும் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, விஜய் இளைஞரே இல்லை எனவும் ,இளைஞர் வயதைக் கடந்துவிட்டார் எனக்கூறி ராகுல்  அவரைத் தட்டிக் கழித்தததாகத் தகவல்கள் வெளியானது.
 
இதனையடுத்து, விஜய் தானுண்டு தனது சினிமா உண்டு என இருந்தார். ஆனால் அரசியல் ஆசை ஊது பர்த்தியாய் அவரது மனதில் அணையாமல் லேசாக எரிந்து கொண்டிருந்தது. 
 
அடுத்ததாக, சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் - ராஜ்கிரண் நடிப்பில் உருவான படத்திற்கு ஒரு ‘படத்தலைப்பு’ பெறுவதில் அப்போதைய ஆளும்கட்சியான திமுகவும் விஜய்க்கு எதிராக இருந்தது. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுகவின் இந்த முடிவுகளை விஜய் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் பல தோல்விப் படங்கள் கொடுத்திருந்த விஜய் ’காவலன்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்த வேளையில், அரசியல் பேச்சு எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். அதனால் விஜயின் படத்திற்கு எதிர்ப்புகள்  கிளம்பவில்லை.
 
இந்தநிலையில்’ தலைவா’ படத்தில் அரசியல் பேச்சுக்களை  விஜய் எடுத்ததில் இருந்து, திமுகவுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக வன்மையாக விஜய் படத்திற்கு தடை விதித்துவருகிறது. அதிமுக முன்னாள்  தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்து இது தொடருவதால், இந்த எதிர்ப்புகள் தற்போது பிகில் படம் வரைக்கும் வந்துள்ளது.
 
விஜய்க்கு எதிராக தானாக எதுவும் அதிமுக அரசு முடிவெடுக்கவில்லை என்பது முக்கியம். அவர் அரசியலில் புகாமல் இருக்கவும், அப்படி அரசியலில் புகுந்தால் அதிமுகவுக்கு எதிராகப் பேசி ஒட்டுகளை  சிதறடிக்காமல் இருக்கச் செய்யவும் அதிமுகவினர் எல்லா அதிகாரங்களையும் பிரம்மாஸ்திரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற முறையில், அன்று விஜய்யை நிராகரித்த காங்கிரஸ் கட்சி இன்று அவருக்கு ஆதரவாக அலைகளை வீசிவருகிறது. அன்று இருந்த விஜய்யைவிட இன்று இருக்கும் விஜய்க்கு ரசிகர்கள் வட்டம் பெருகி மாஸும் கூடியுள்ளதே இதற்குக் காரணம். 
 
திமுக அன்று விஜய் விரும்பிய படத்தலைப்பைக் கொடுக்காமல் மனம் வருத்தத்தில் இருந்த விஜய்யை இன்று, திமுக தலைவர்கள் தம் குடும்ப விழாவுக்கு விரும்பி அழைத்திருப்பதைப் பார்த்தால் அதிமுகவுக்கு எதிராக உள்ள திமுக, விஜய்யை தமது கருவியாக்கிக்கொள்ள முயல்கிறதோ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது.
எப்படி இருந்தாலும் இரு பெரிய திராவிட கட்சிகளை எதிர்த்துக் கொண்டு காலம் தள்ள முடியாது என்று விஜய் திமுக கட்சியில் ஒதுங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இதில் முக்கியமாக, குருவி படத்தை பிரமாண்டமாகத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை அவரே சொல்லியிருக்கிறார். இன்று அவரே ஒரு ஸ்டார் ஆகிவிட்டார். அதனால் இன்னொரு பெரிய ஸ்டாரை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டால் மக்களிடம்  திமுகவுக்கு செல்வாக்கு அதிகரிக்க செய்ய கட்சித்தலைவர் ஸ்டாலின் உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
நடிகர் விஜய்க்கு தற்போது அரசியல் பக்கபலம் வேண்டும், அதனால் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இந்த பிகில் பட ஆடியோ விவகாரத்தில் விஜய்யின் சார்பில் ஆதரவுக்குரல் கொடுக்கிறார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
இந்த நிலையில், பிகில் ஆடியோ விழாவில் அசால்டாக அரசியல் வசனம்  பேசிய விஜய் அடுத்த சில நாட்களில் வெளிநாடு போய்விட்டார். ஆனால், அவர் பற்ற வைத்த அரசியல் நெருப்பு இன்னும் பற்றி எரிந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.