1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 23 ஜூன் 2024 (15:35 IST)

மீனவர்கள் கைதுக்கு கண்டனம்..! ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்..! ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு..!!

Fisherman Boat
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையை கண்டித்தும், கைதான மீனவர்களை விடுவிக்க கோரியும் நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.