1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 23 ஜூன் 2024 (15:38 IST)

தமிழக மீனவர்கள் 18 பேர் கைது..! தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..!!

fisherman
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களுடன் 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நேற்று காலை  வழக்கம் போல் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகில் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் மீன்பிடித்து விட்டு அதிகாலை 2 மணியளவில் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரைக் கைது செய்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 18 மீனவர்களையும் விசாரணைக்காக யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரைக் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.