1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (10:00 IST)

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… நாளை சென்னை போக்குவரத்தில் மாற்றம்!

நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் சென்னை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் நாளை முடிவு பெறுகிறது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நிறைவு விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

நிறைவு விழாவையொட்டி சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, பெரியார் சாலை, செண்டிரல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதனால் தேவைக்கேற்ப மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

அதுபோல ஈவிகே சம்பத் சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் வரவும் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

வணிக வாகனங்கள் ஈவேரா சாலை, கெங்குரட்டி சாலை, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து செண்டிரல் செல்ல அனுமதிக்கப்படாது. ப்ராட்வேயில் இருந்து வணிக வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பப்படும். அதற்கு ஏற்றப்படி செண்டிரல் ரயில் நிலையம் செல்லும் பயணிகள் அவர்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.