1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai corona patients protested in special wards

போதிய வசதிகள் இல்லை – கொரோனா நோயாளிகள் போராட்டம்!

சென்னை
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் போதிய வசதிகள் இல்லை என கொரோனா தொற்று உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இப்போது 3000 ஐ கடந்துள்ளது. இதனால் ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்ட ராஜீவ்காந்தி, கேஎம்சி, ஸ்டான்லி, ஓமந்தூரார் அரசின் தோட்ட மருத்துவமனைகளில் இடங்கள் நிரம்பிவிட்டதால், தற்காலிகமாக நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கு 60 நோயாளிகளும், கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அங்கு போதுமான வசதிகள் இல்லை என்றும், அதை அமைத்துத் தர வேண்டும் எனவும் அங்கு தங்க வைக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காற்று வசதி இல்லாமை, உணவு சரியாக வழங்காதது மற்றும் மருத்துவர்கள் வந்து பரிசோதிக்காதது என தங்கள் குறைகளை முறையிட்டுள்ளனர். இதையெல்லாம் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
இரண்டு நாளில் 300 கோடியை நெருங்கிய டாஸ்மாக் வருமானம்! மதுரைதான் நம்பர் 1