1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (15:08 IST)

கோயம்பேட்டில் பேருந்து இயக்கம் முற்றிலும் நிறுத்தம்!!

இன்று பிற்பகல் 2.30 மணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்தும் இயங்காது என அறிவிப்பு. 
 
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர். 
 
எனவே, கொரோனா பாதிப்பு நிலையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியில் இருந்து 31 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. 
 
144 பிறப்பிக்கப்பட இருப்பதால் தலைநகரமான சென்னையிலிருந்து மக்கள் பலர் அவசர அவசரமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இதனால் நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பெரும் மக்கள் நெரிசலாக காணப்பட்டது. ரயில்கள் செயல்பாட்டில் இல்லாததால் மக்கள் பெரிதும் பேருந்துகளையே நம்பி இருந்தனர். 
 
நேற்று இரவு மட்டும் சென்னையிலிருந்து 1.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 144 துவங்குவதால் 2.30 மணியில் இருந்தே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்ப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.