வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (12:37 IST)

உதயநிதிக்கு குடுப்பீங்க! காசமுத்துவ கண்டுக்க மாட்டீங்க? – கோல் மூட்டிவிடும் பாஜக

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது தமிழக பாஜக.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான மனு தாக்கல் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு தொகுதிகளில் தி.மு.க விக்கிரவாண்டியிலும், காங்கிரஸ் நாங்குநேரியிலும் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளன.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காசமுத்து என்ற திமுக தொண்டர் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று கலைஞரின் பெருமைகளை பிரச்சாரம் செய்தார். அவரது இந்த அரும் செயலை பாராட்டும் வண்ணம் திமுக தலைவர் ஸ்டாலின், காசமுத்து மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். இதை ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

அதை ஷேர் செய்த தமிழக பாஜக “காசமுத்துக்கள் என்றும் உதயநிதி ஆக முடியாது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.  நெல்லை காசமுத்து நான்குநேரியில் போட்டியிட முடியுமா என்ன?” என்று கேள்வியெழுப்பி உள்ளனர்.

தற்போது நாங்குநேரியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ்தான் போட்டியிடுகிறது. மேலும் உதயநிதிக்கு விக்கிரவாண்டியில் சீட் கொடுக்கப்படவில்லை. நா.புகழேந்திதான் திமுக சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் பாஜக இப்படிபதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட திமுக விசுவாசிகள் பலர் விருப்ப மனு அளித்திருந்தாலும் அதிலிருந்து புகழேந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் விருப்ப மனு அளித்த சிலர் மனக்கசப்பில் உள்ளதாக தெரிகிறது. அவர்களை மூட்டிவிடும் படி பாஜகவின் இந்த பதிவு இருப்பதாக கூறப்படுகிறது.