1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (17:13 IST)

ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை..! அமைச்சர் பிடிஆர் கடும் விமர்சனம்..!!

PTR
ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 
இண்டியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட தளவாய், அக்ரஹாரம், தாளமுத்து பிள்ளை சந்து, செல்லத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது பேசி அவர், இது சாதாரண தேர்தல் இல்லை, அஇஅதிமுக ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறது என தெரிவித்தார். அதில் தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்கிறார்கள் என்றும் சட்டமன்றத்திலேயே இது குறித்து, நான் இந்த உண்மையை சொல்லி இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
 
கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது, அதை அவர்கள் வெளிப்படையாகவும் சொல்லவில்லை என தெரிவித்த பி.டி.ஆர்., அவர்கள் தாலியும் வாங்கவில்லை, தங்கமும் வாங்கவில்லை, நிதியும் அதற்காக ஒதுக்கவும் இல்லை என்று கடுமையாக சாடினார்.
 
ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்தை துவக்குவது என்பது முடியாத காரியம் என்றும்  அதிமுக நிறுத்தி வைத்த திட்டத்தினை மீண்டும் எங்களால் துவக்க முடியாது என்ற காரணத்தினால், பெண் கல்விக்காக, அவர்கள் ஊக்கத்திற்காக, ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் என்கிற புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தினோம் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
 
இது சாதாரண தேர்தல் அல்ல, மிக முக்கியமாக நடக்க இருக்கின்ற தேர்தல் என்றும் இந்தியாவில் ஜனநாயகத்தை படுகொலை செய்து பணநாயகத்தின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாஜக அரசு மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

 
பங்களாதேசை விட பொருளாதாரம் மிகவும் சரிவாக கொண்டு சென்றுள்ளனர் என்று அவர் விமர்சித்தார். மோசமான ஒரு பொருளாதாரத்தை கையாண்டுள்ளது பாஜக அரசு என குற்றம் சாட்டிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஊழலுக்கும், பாஜகவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிற இந்த உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால், அது பாஜக தான் என்று கடுமையாக சாடினார்.