வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (12:46 IST)

எடப்பாடி - ஒபிஎஸ்க்கு மாற்றாக செங்கோட்டையன் : பாஜக தீட்டும் பலே திட்டம்

அதிமுகவிற்கு தற்போது எடப்பாடி-ஓபிஎஸ் தலைமைக்கு மாற்றாக அமைச்சர் செங்கோட்டையனை கொண்டுவர பாஜக மேலிடம் திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
சசிகலாவின் தயவால் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசின் அறிவுரைப்படி சசிகலா-தினகரன் ஆகியோருக்கு எதிராக செயல்பட தொடங்கினார். ஓ.பி.எஸ்-ஐ தன்னுடன் இணைத்துக்கொண்டாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. 
 
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அவர் கட்டுப்பட்டு நடப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அரசை பினாமி அரசு என்றும் முதுகெலும்பில்லாத அரசு என்றும் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

 
இந்நிலையில், தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் பாஜகவோ, வரும் தேர்தல்களில் சூழ்நிலைக்கு ஏற்றபடி அதிமுக அல்லது திமுகவோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், கூட்டணி கதவை ஸ்டாலின் மூடிவிட்டார். காவியை எதிர்ப்போம் என அவர் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே, ஆன்மீக அரசியலை முன்னெடுத்துள்ள ரஜினி மற்றும் அதிமுகவோடு கை கோர்க்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 
 
அதாவது வரும் தேர்தல்களில் அதிமுக-ரஜினி-பாஜக கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. அதனால்தான், அதிமுகவின் தலைமை ரஜினி என சமீபத்தில் கூட செய்திகள் வெளியானது. ஆனால், எடப்பாடி-ஒபிஎஸ் இரட்டை தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ரஜினி, அதிமுக தலைமையை மாற்றுங்கள். அப்போதுதான் தேர்தலில் எடுபடும். அதற்கான வேலையை செய்யுங்கள் என கூட்டணி டீல் பேசிய பாஜக மேலிடத்திற்கு தெரிவித்துள்ளாராம். 

 
எனவே, ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரை குறி வைத்து சிபிஐ மற்றும் வருமானவரித்துறை சோதனைகளை நடத்தி  அதிமுக கட்சி மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி, அதன் தொடர்ச்சியாக வேறு தலைமையை நியமித்து, ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என பாஜக திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
எடப்பாடி -ஓபிஎஸ் இரட்டை தலைமைக்கு மாற்றாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. காரணம், அதிமுகவில் சீனியர், ஊழல் வழக்குகளில் சிக்காதவர், அதிமுக கட்சியினரிடையே அவருக்குள்ள மரியாதை என அனைத்தையும் கணக்கு போட்டு அவரை முன்னெடுப்பதற்கான முயற்சியை பாஜக மேலிடம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கூவத்தூர் விடுதில் அடுத்த முதல்வர் என்ற ஆலோசனையில் சசிகலா இருந்த போது, அவரின் லிஸ்டில் செங்கோட்டையனும் இருந்தார். ஆனால், சிபிஐ சோதனையை சந்திக்கும் நெருக்கடியில் எடப்பாடி பழனிச்சாமி இருந்ததால், பரிதாபத்தின் பேரில் தன்னை போலவே சிக்கலில் இருக்கும் பழனிச்சாமியை சசிகலா தேர்ந்தெடுத்தார் என அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.