திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு..
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற இந்த விசாரணையில், இரு தரப்பு வாதங்களும் காரசாரமாக இடம்பெற்றன.
அறநிலையத்துறை தரப்பில், முன்னர் நடைமுறையில் இல்லாத புதிய விஷயத்தை உயர் நீதிமன்ற உத்தரவு மூலம் புகுத்துவதாக வாதிடப்பட்டது. ஜனவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இத்தனை நாட்கள் அரசு என்ன செய்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதில் காலதாமதம் ஆனதாக அரசு தரப்பு விளக்கமளித்தது.
வழக்கை முழுமையாக விசாரித்த பிறகே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், இடைக்கால தடை எதையும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வை அணுகவும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Edited by Siva
