1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (13:51 IST)

பெண்ணை தாக்கிய தீட்சிதருக்கு ஜாமீன்..

வழிபட வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் பகுதியை சேர்ந்த லதா என்பவர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியராக உள்ளார். சமீபத்தில் இவர் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்ய நடராஜர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த ஆலயத்தில் உள்ள பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனை தட்டை வழங்கியுள்ளார். ஆனால் தீட்சிதரோ அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே மந்திரம் கூட சொல்லாமல் தீபாராதனை காட்டியதாக கூறப்படுகிறது.

“ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என தீட்சிதரிடம் அப்பெண் கேள்வி கேட்க, ஏற்பட்ட வாக்குவாதத்தில் தீட்சிதர் அப்பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். அதில் அப்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து லதா போலீஸில் புகார் அளித்தார். அதன் பின்பு திட்சிதர் தர்ஷன் தலைமறைவாகியுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீட்சிதர் தர்ஷனை கோவில் நிர்வாக 3 மாதம் சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் இது குறித்தான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கி குற்றவியல் நடுவர் முன் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.