நயினார் நாகேந்திரனுடன் பனிப்போரா?!.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!...
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. தமிழகத்தில் இதற்கு முன்பு பலபேர் அந்த பதவியில் இருந்தாலும் பாஜகவை தமிழகத்தில் ஓரளவுக்கு வளர்த்தவர் என்றால் அது அண்ணாமலைதான்.திமுகவினர் அவரை ட்ரோல் செய்தாலும், கடுமையாக நக்கல் அடித்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாஜக தலைவர் பதவியை சிறப்பாக செய்தார் அண்ணாமலை. தினமும் செய்தியாளர்களை சந்தித்து திமுகவை விமர்சிக்கும் வேலையை அவர் தொடர்ந்து செய்து வந்தார்..
ஆனாலும், எடப்பாடி பழனிச்சாமியிடம் அண்ணாமலைக்கு ஏற்பட்ட கருத்து மோதலால் அவரின் பதவி பறிக்கப்பட்டது. தற்போது அந்த பதவியில் நயினார் நாகேந்திரன் இருக்கிறார்.
ஒருபக்கம் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தேர்தல் பொறுப்பிலிருந்து இருந்து தான் விலகுவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருக்கிறார்.. கட்சி தலைமை மீது அவருக்கு நிறைய அதிருப்தி இருப்பதாக தெரிகிறது.
திமுகவை தோற்கடிப்பதற்கு எந்த தேர்தல் வியூகமும் இல்லாமல் என்னை பொறுப்பாளராக நியமித்தால் நான் எப்படி வேலை செய்ய முடியும்? என்றெல்லாம் பாஜக தலைமையிடம் அண்ணாமலை சொன்னதாக செய்திகள் கசிந்திருக்கிறது. மேலும், சக்தி கேந்திராவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இதை மறுத்திருக்கிறார் அண்ணாமலை.
தமிழ்நாடு பாஜகவின் பூத் கமிட்டிகளை ஒருங்கிணைக்கும் சக்தி கேந்திராவின் தலைவராக என்னை நியமிக்கவில்லை. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் எனக்கு எந்த பனிப்போரும் இல்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் இப்போது பதில் சொல்ல முடியாது. தேர்தலுக்கு நிறைய நாட்கள் உள்ளதால் பொறுமையாக இருங்கள்.. அனைத்து கேள்விகளுக்கும் அடுத்தடுத்து பதில் சொல்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்..