1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 மே 2024 (10:18 IST)

தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கேட்டது கிடைக்கும்! – புதுக்கோட்டை பைரவர் கோவிலுக்கு புறப்பட்ட அமித்ஷா!

Amitshah
இன்றுடன் மக்களவை தேர்தல் கடைசி கட்ட பிரச்சாரமும் முடிவடையும் நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று புதுக்கோட்டை வருகிறார்.



பல கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரங்களை நிறைவு செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.

அதேசமயம் பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில் பாஜக பிரபலங்கள் பலரும் நாட்டில் உள்ள முக்கியமான பல கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய தொடங்கியுள்ளனர். முக்கியமாக தமிழ்நாடு பெரிதும் கவனத்திற்கு உரியதாக ஆகியுள்ளது. பிரதமர் மோடி கன்னியாக்குமரியில் தங்கியிருந்து 3 நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார்.


இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியகிரீஸ்வரர் சிவ ஸ்தலமும், சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் மிகவும் புகழ்பெற்றவை ஆகும். இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான  காலபைரவர் வீற்றிருக்கிறார். இந்த காலைபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமிநாளில் வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் இன்று தேய்பிறை அஷ்டமி நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சிக்கு விமானம் மூலமாக வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காலபைரவர் கோவிலுக்கு செல்கிறார். அங்கிருந்து திரும்பிய பின் திருப்பதிக்கு செல்கிறார். அமித்ஷா வருகையினால் திருமயம் தீவிர போலீஸ் கண்காணிப்பில் உள்ளது.

Edit by Prasanth.K