1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (19:26 IST)

அ.தி.மு.க. அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்குவீர்! - சண்முகம் எம்.பி.

tamilnadu govt bus
பழைய ஓய்வூதிய திட்டம்,  15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்து,  இன்று அரசுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. இதில், 6 கோரிக்கைகளில் 2 மட்டும் ஏற்கப்பட்டதால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
 
எனவே நாளை 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால்  நாளை பயணம்  மேற்கொள்ளும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு எந்தவித சிரமங்களும் இருக்க கூடாது என்ற நோக்கில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  அ.தி.மு.க. அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்குவீர்! என்று தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான சண்முகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
 
''மு.சண்முகம் எம்.பி. அறிக்கை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்.
 
ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமதுநிலைப்பாடு. ஆயினும் அரசு ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு சம்மந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
 
அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது நமது கழக அரசு. இப்பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டும், நமது தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டுமாய் தொ.மு.ச. பேரவை சார்பில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை தொ.மு.ச. பேரவை அன்போடு கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச. பேரவை துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்''என்று தெரிவித்துள்ளார்.