வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (10:44 IST)

ஓட்டு போடாத உனக்கு இங்க என்ன வேலை.. முஸ்லிம் என்பதால் அசிங்கபடுத்திய அதிமுக

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மனு கொடுக்க வந்த முஸ்லிம் நபரை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முஸ்லிம் ஒருவர் வந்து கொடுத்த மனுவை ஏற்காமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
ஆம், ரேஷன் கடை பிரச்சனை தொடர்பாக அதிமுக பிரமுகர் கலிலுல்லா என்பவர் பிரச்சாரத்திற்கு வந்திருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் மனு ஒன்றை கொடுத்தார். அப்போது அமைச்சர், முஸ்லீம்கள் தான் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டீர்களே, பின்ன எதுக்கு என்னை பார்க்க வரீங்க? 
 
அதிமுகவுக்கு வாக்களிக்காத முஸ்லீம்களுக்கு நான் ஏன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். உங்க மனுவ நான் வாங்க மாட்டேன், யாருக்கு ஓட்டு போட்டீர்களோ அவங்க கிட்டயே போய் இதை கொடுங்க என குரலை உயர்த்தி பேசியுள்ளார். 
 
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அதோடு, இதற்கு கண்டனம் தெரிவித்தும், முதல்வர் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.