வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (09:55 IST)

நான் அடிப்பேன்னு முதல்வரே பயப்படுகிறார்: கருணாஸ் சர்ச்சை பேச்சு

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், அதிமுக, திமுக, தினகரன் கட்சி என மாறி மாறி ஆதரவு கொடுத்து வரும் கருணாஸ், காலத்திற்கு தகுந்தால் போல் ஒருசிலரை போற்றியும் சிலரை தூற்றியும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில், 'நான் அடிப்பேன்னு முதல்வரே பயப்படுகிறார்' என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:

தேவர் ஜெயந்திக்கு முதல்வர் வர்றாருன்னு சொன்னாங்க, ஐயா இடத்துக்கு வர்றாருன்னு மரியாதை கொடுக்கணும்னு நின்றுக்கொண்டிருந்தால் 100 போலீஸை திடீரென என்னை சுற்றி வளைத்தனர். விளக்கம் கேட்டால் நீங்கள் முதல்வரை மறிக்கப்போகிறீர்கள், அடிக்கப்போகிறீர்கள் என்பதால் பாதுகாப்புன்னு சொல்றாங்க. பாருங்க முதல்வரே நான் அடிப்பேன்னு பயப்படுகிறார். ஆனால் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தேன்' என்று பேசினார்.

மேலும் கருணாஸ் இதே கூட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்தும் ஜாதிமோதலை உண்டாகும் வகையிலும் பேசியதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு விளக்கமளித்த கருணாஸ், 'யாருடைய மனதும் புண்படும் வகையில் பேசியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். தேவையின்றி வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் பேசினேன். மற்றபடி காவல்துறையை மதிப்பவன் நான் நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் கிடையாது' என்று கருணாஸ் கூறியுள்ளார்.