வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (11:43 IST)

அங்கீகாரம் பெருமகிழ்ச்சி - மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்.! த.வெ.க தலைவர் விஜய்.!!

Vijay
தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளதாகவும், முதல் மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் எனவும் அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே என தெரிவித்துள்ளார்.
 
எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம் என்றும் இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம் என்று அவர் கூறியுள்ளார்.
 
அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவு செய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது என்றும் இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். 
 
திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

 
தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம் என்றும் வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.