வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (09:01 IST)

திடீரென முளைத்த ஜெ சிலை – தலையைப் பிய்த்துக்கொள்ளும் அதிகாரிகள்

தஞ்சை ரயில்நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் திடீரென  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அதனால் அவரது கட்சியினர் அவரது 70 வது பிறந்தநாளான 2018 பிப்ரவரி 24 அன்று அவரது முழு உருவச்சிலையை திறந்தனர்.

திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதாவின் உருவத்தோடு பொருந்தவில்லை என கேலிக்கு உள்ளானதால் அந்த சிலை அப்புறப்படுத்தப்பட்டு, நவம்பர் 14 ஆம் தேதி மீண்டும் புது சிலை திறக்கப்பட்டது. சிலை திறப்பு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்வர் , துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது தஞ்சாவூரில் திடிரென வைக்கப்பட்டுள்ள் இந்த சிலைக்கு எந்த கொண்டாட்டமும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்துள்ளது. ஏற்கெனவே இருந்த எம்.ஜி.ஆர் சிலை சில மாதங்களாக பராமரிப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று திறக்கப்பட்ட அந்த சிலைக்கு பக்கத்தில் ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட்டு இருந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சிலையால் அரசு அதிகாரிகளுக்குப் புதிய சிக்கல் தோன்றியுள்ளது. இந்த புதிய சிலை வைப்பது பற்றி மாவட்ட நிர்வாகத்திடமோ, வருவாய் துறையிடமோ எவ்வித அனுமதியும் அதிமுக சார்பில் வாங்கவில்லை எனத் தெரிகிறது. அதனால் ஆளும் அதிமுக வை எதிர்த்து எப்படி சிலையை எப்படி அப்புறப்படுத்துவது என்று அதிகாரிகள் தலையைப் பிய்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.