1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (15:14 IST)

பூஜையில் வெடித்த மர்ம பொருள்:தடயங்கள் மூலம் விசாரணை

திருவள்ளூரில் பூஜை அறையில் மர்ம பொருள் வெடித்து பூசாரி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் இறையாமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவர் ஒரு சாமியார் ஆவார். 45 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சனிக்கிழமை சென்னை பெசண்ட் நகரை சேர்ந்த லாவண்யா என்ற பெண், கோவிந்தராஜின் வீட்டில் வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கோவிந்தராஜ் தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு மர்ம பொருள் பயங்கரமாக வெடித்துள்ளது. இதில் கோவிந்தராஜின் உடல் முழுவதும் தீப்பற்றியது. வெடி சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த லாவண்யா ஓடி வந்து பார்த்தபோது, கோவிந்தராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாவண்யா மப்பேடு போலீஸாரிடம் தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கோவிந்தராஜின் உடலை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை தடவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

வெடித்த பொருள் என்ன என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் பூஜை அறையில் ரத்தக்கறை சிதறி கிடப்பதை போலீஸார் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது. கோவிந்தராஜ் வீட்டில் தங்கியிருந்த லாவண்யாவை தற்போது போலீஸார் விசாரித்து வருவதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிந்தராஜின் சொந்த ஊரான சென்னை நங்கநல்லூரில் 15 வருடங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் வாங்கி குடியிருந்து, அதில் மூலிகை செடிகளை வளர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.