1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (11:46 IST)

வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் பரிதாப பலி! இவர்கள் எல்லாம் மலை ஏற வேண்டாம்! – வனத்துறை எச்சரிக்கை!

Velliangiri Hills
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மகாசிவராத்திரிக்காக பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவ ஸ்தலத்திற்கு சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷ காலங்களில் பக்தர்கள் செல்வது வழக்கம். சமீப காலமாக பல யூட்யூபர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறி சென்று அதை வீடியோ பதிவாக போட்டு வரும் நிலையில் வெள்ளியங்கிரி மலை செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மகாசிவராத்திரிக்காக கடந்த மாதம் 12ம் தேதி முதல் பக்தர்கள், மலையேற விரும்பும் பயணிகள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் மலை ஏறிய நிலையில் சிலர் மூச்சு திணறல், இதய பிரச்சினைகள் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.


கடந்த 2 நாட்களில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவர் முதல் மலையை தாண்டும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். தெலுங்கானாவை சேர்ந்த சுப்பாராவ் (57) என்பவர் நான்காவது மலையிலும், தேனியை சேர்ந்த பாண்டியன் (40) என்பவர் இரண்டாவது மலையிலும் மயங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மூச்சு திணறல், சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள், இதய நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் இந்த ஆபத்தான மலையேற்றத்தை மேற்கொள்ள வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K