வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (14:57 IST)

2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்.! 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை.! அதிரடி தீர்ப்பு..!

Villupuram Court
திண்டிவனம் அருகே  இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உறவினர்கள் 15 பேருக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் வசித்து வந்தவர் கோமதி.  உறவினருடன் அவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் பிறந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார்.
 
புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்த அந்தப் பெண், அங்கு ஜவுளிக் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்த நிலையில், அவருடன் பணியாற்றிய நபரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண்ணின் முதல் கணவர் மூலம் பிறந்த இரு பெண் குழந்தைகளும் சொந்த ஊரில் பாட்டியிடம் வளர்ந்து வந்தனர்.

Police Station
9 வயது மற்றும் 7 வயதான இரு சிறுமியரும் தாயின் சொந்த ஊரிலேயே உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில், கோமதியின் தம்பி கஜேந்திரன், கடந்த ஓராண்டாக இரு சிறுமியரையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார். மேலும் தனது உறவினர்கள் சிலருக்கும் சிறுமிகளை விருந்தாக்கியுள்ளார். வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியரிடம் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை விழுப்புரம்  போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி  வினோதா இன்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.