வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெப்பாலை எந்தெந்த நோய்களுக்கு மருந்தாகிறது தெரியுமா....?

வெப்பு எனப்படும் வெப்பம் தொடர்பான நோய்களைக் கண்டிக்கக் கூடியது என்பதால் இதற்கு வெப்பாலை என்று பெயர் வந்தது.


வெப்ப நோய்களான வயிற்றுக்  கழிச்சல், சரும நோய்கள், உடற்சூடு, காய்ச்சல் போன்ற நோய்களைத் தணிக்கும் திறன் கொண்டது வெப்பாலை. 
 
பேதி மற்றும் சீதபேதியை நிறுத்தவல்லது. மூலம் என்னும் ஆசனவாய்ப் பற்றிய நோய்களையும் பல்வேறு சரும நோய்களையும் போக்கி உடலைப் பாதுகாக்கவல்லது. இதன் விதைகளும் ரத்த சீதபேதிகளைத் தணிக்கவல்லது. 
 
குருதி ஒழுக்கோ, நீர் ஒழுக்கோ எவ்விதத்தாயினும், உடலை எங்கு பற்றியதாயினும் அதை வற்றச் செய்யும் மருந்தாகும். உடலில் வியர்வையைத் தூண்டி வெப்பத்தை தணித்து காய்ச்சலையும் உடல்வலியையும் போக்குவிக்கக் கூடியது.
 
சித்த, ஆயுர்வேத முறைகளில் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பொருமல், பித்த சம்பந்தமான நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது கல்லீரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தக் கூடியதாகவும், குருதிச் சீர்பாட்டுக்காகவும், முத்தோஷக் கேடுகளை (வாத, பித்த, சிலேத்துமம்) சமன்படுத்தி ஆரோக்கியத்தை நிலைப்படுத்த வல்லதாகவும் விளங்குகிறது.
 
வெப்பாலை மரப்பட்டையினின்று பிரித்தெடுக்கப் பெறும் வேதிப்பொருள் வலித் தணிப்பானாகவும், வீக்கத்தைக் கரைப்பதாகவும் விளங்குகிறது. மேலும் இது  மலேரியா என்னும் குளிர்காய்ச்சல், மூட்டுவாதம், பல்வலி, வீக்கம் இவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன் தருகிறது. இது புண்களை விரைந்து ஆற்றும் ஓர் உன்னத குணம் படைத்தது.
 
வெப்பாலை குருதியில் சேர்ந்த மிகுதியான கொழுப்புச் சத்துவத்தை கரைத்து வெளியேற்றக்கூடியது. இதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது.  ரத்தத்தில் மிகுந்திருக்கும் சர்க்கரையின் அளவையும் இது கட்டுப்படுத்தவல்லது.